சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு எதிர்வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
கடந்த தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்றார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 4ஆம் தேதி 46 வயதேயான திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் திருமகன் ஈவெரா.
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரனான திருமகன் ஈவெரா சட்டப்பேரவைக்குச் சென்றார்.
அவர் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் ஆட்சியமைத்த பின்னர் திமுக எதிர்கொள்ளும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.
எனவே இடைத்தேர்தலில் திமுக களமிறங்குமா அல்லது காங்கிரஸ் வசம் உள்ள தொகுதி என்பதால் அக்கட்சிக்கு ஒதுக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஜனவரி 31ஆம் தேதி ஈரோடு கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் எனவும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற பிப்ரவரி 10ஆம் தேதி இறுதி நாள்.
இதையடுத்து 27ம் தேதி வாக்குப்பதிவுக்குப் பின் மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

