சென்னை: புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன், 78, சென்னையில் சென்ற வியாழக்கிழமை காலமானார்.
நடனக் குரு, எழுத்தாளர், ஆய்வாளர் என பன்முகத் திறன் கொண்ட இவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் காலை மூச்சு விடுவதற்குச் சிரமமாக இருப்பதாக அவரது சகோதரியும் கர்நாடக இசைப் பாடகருமான சாருமதி ராமச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
பிரபல திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் சகோதரர் கே.விஸ்வநாதன் - அலமேலு தம்பதியருக்கு 1944ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி லட்சுமி விஸ்வநாதன் பிறந்தார்.
இவரது 7வது வயதில் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் நடைபெற்றது.
இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றியும் பரதநாட்டியம் உள்ளிட்டவை தொடர்பாக நான்கு நூல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது, இந்திய அதிபரால் வழங்கப்பட்ட தேசிய சங்கீத நாடக அகாடமி விருது, கிருஷ்ண கான சபா வழங்கிய நிருத்ய சாருமதி விருது, சென்னை மியூசிக் அகாடமி வழங்கிய நிருத்ய கலாநிதி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
அவரது மறைவு குறித்து கருத்து தெரிவித்த சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என். முரளி, "லட்சுமி விஸ்வநாதனின் நடனம் மிகவும் ஆழமான மற்றும் நுட்பமானதாக அழகியல் நிறைந்த அறிவார்ந்த அணுகு முறையை கொண்டிருந்தது," என்றார்.
பரதநாட்டிய குரு பத்மா சுப்ரமணியம், ''லட்சுமி விஸ்வ நாதன் மறைவுசெய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனவலியை ஏற்படுத்தியது. இது எனக்கு மட்டுமல்லாது பரதநாட்டிய உலகத்துக்கே பேரிழப்பாகும்,'' என்றார்.