சென்னை: அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர், அவருக்கு எதிராக 234 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், "இது ரவி என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டம் அல்ல. அவர் மையப்படுத்தும் ஆர்எஸ்எஸ், பாஜக, சனாதன தர்மம் என்ற பழமைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம்," என்றார்.
"காந்தியைப் போன்ற ராம பக்தர் யாரும் இருக்க முடியாது. இன்று ராமர் இருந்திருந்தால் காந்திக்குதான் வாக்களித்திருப்பார். பாஜகவுக்கு வாக்களித்திருக்க மாட்டார். காந்தி கடவுள், மத நம்பிக்கை உடையவர். தீண்டாமை, உடன்கட்டை ஏறுவதை அவர் எதிர்த்தார். ஆதீனங்களோ, சங்கராச்சாரியாரோ தீண்டாமையை எதிர்க்கவில்லை," என்று கே.எஸ். அழகிரி குறிப்பிட்டார்.
"காங்கிரஸ் கட்சி எந்த மதத்துக்கும் ஆதரவானது இல்லை. எதிரானவர்களும் இல்லை. எங்களுக்கும் மத உணர்வு உண்டு. ஆனால் மதவெறி இல்லை. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர், இந்திய அரசின் பிரதிநிதி. ஆர்எஸ்எஸ், பாஜக பிரதிநிதிபோல ஆளுநர் பேசக்கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் சொல்லித் தருவதை அப்படியே செயல்படுத்தும் மாணவராக ஆளுநர் உள்ளார்," என்றும் அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, உ.பலராமன், மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

