ஈரோடு: ஈரோடு கிழக்குச் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டி யிட பாமக மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று அது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது.
"கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
'இடைத்தேர்தல்கள் தேவை யற்றவை; மக்களின் வரிப் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பவை.
"அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப் பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை;
"அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம்'' என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.
"இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதன்படியே ஈரோடு கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை;
"எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர் நிலைக்குழு கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
பாமக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் உள்ளன. மற்ற கட்சிகளின் நிலைப்பாடு இன்னமும் தெரியவில்லை.

