மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றி
அமைக்கும் முறையை தமிழக அரசு ஏற்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியுடன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. விளையாட்டு அணியின் நேர்காணல் நிகழ்ச்சி 2வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நேர்காணலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. முன்னிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார்.
"பெட்ரோல்-டீசல் விலையைப் போன்று மின்சாரக் கட்டணத்திலும் அடிக்கடி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
"தனியாரிடம் மின்சார வாரியம் ஒப்படைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் கருணாநிதி கொண்டு வந்த சிறப்பு வாய்ந்த திட்டமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், அதேபோன்று 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத் தறி, கைத்தறி மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரம், மானியம் இவையெல்லாம் கேள்விக்குரியாகிவிடும் வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா அமைந்துள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"இந்த மசோதாவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் ஏற்க மாட்டார். அனுமதிக்கவும் மாட்டார்.
"எனவே மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் வரும். உயரும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டாம். "மாதாந்திர மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது," என்று அவர் கூறினார்.
இதற்கிடையே இரண்டு கோடியே ஒரு லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது சிறப்பு வாய்ந்த முயற்சி ஆகும். மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனமயமாக்கவும் இந்த முயற்சி எடுக்கப் பட்டு உள்ளது," என்றார்.

