ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் வாக்குச் சேகரிக்கும் பணி தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தொடங்கப்பட்டது.
தற்போது வாக்கு சேகரிக்கும் இந்தப் பணி ஈரோடு பெரியார் நகரில் இருந்து தொடங்கி தொகுதி முழுவதும் நடைபெற உள்ளது.
இதில் திமுகவின் முக்கிய தலைவர்களும் அமைச்சர்களும் பங்கேற்று வாக்குச் சேகரிக்கும் பணியில் மிக விரைவில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கிடையே ஈரோடு கிழக்குத் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது குறித்து அதிமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா.வுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இம்முறை அ.தி.மு.க. இங்கு போட்டியிடுகிறது.
இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில் அந்தத் தொகுதியில் புகழ்பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு என்பவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இதனால் அ.தி.மு.க தரப்பில் போட்டியிடுவது கே.வி. ராமலிங் கமா, தென்னரசா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும்," என்று கூறினார்.
"அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விட்டோம். தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டது," என்றும் மேலும் தெரிவித்தார்.

