சென்னை: ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் தொண்டரின் இல்லத் திருமணத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் கட்சி நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ. ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்லத் திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனி சாமி கார் மூலம் சேலத்திலிருந்து வந்தார்.
திண்டுக்கல், வத்தலகுண்டு வழியாக தேனி மாவட்டத்துக்குள் நுழைந்தபோது அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக அவரது கார் கூட்டத்தில் இருந்து மேடைக்கு செல்ல நீண்ட நேரமானது.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு வருகை தருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதய குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, 'நமது வழி தனி வழி' என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்றார்.
இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பிறகு அங்கிருந்து கிளம்பி கம்பத்தில் நடைபெற்ற மற்றொரு கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்வில் பங்கேற்க அவர் புறப்பட்டார்.

