சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வந்தது.
சில நாட்களுக்கு முன்பு காசி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கான பாராட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்ற பெயருக்குப் பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்று கூறினார்.
ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து தமிழகமா, தமிழ்நாடா என்ற புதிய சர்ச்சை கிளம்பியது.
ஆளுநரின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
அண்மையில் தமிழக சட்ட சபையில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந் தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் சட்டசபை கூட்டத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரைக்குப் பதிலாக மத்திய அரசின் முத்திரை இடம்பெற்று இருந்தது.
இதற்கிடையே தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் அதிபர் திரௌபதி மர்முவைச் சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர்.
இதனையடுத்து, டெல்லி சென்று திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ வரவேற்பு அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

