சென்னை: தமிழ்நாடு முழு வதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.
அது மட்டுமில்லாமல் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை அளவீடு செய்திடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு இதுவரைஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதனை தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் மங்கள லட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோயிலில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு திருப்பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.
"1,100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட மங்களலட்சுமி சமேத அழகு ராஜப் பெருமாள் கோயிலை தொன்மை மாறாமல் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது," என்று திரு சேகர்பாபு மேலும் தெரிவித்தார்.