ஆ. ராசாவுக்கு கண்டனம்
சென்னை: காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ அருகதையோ இல்லை. பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துகளை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று என்.ஆர். தனபாலன் தலைமையில் கூடிய நாடார் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆ ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அச்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
தேமுதிக தனித்துப் போட்டி
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடப்போவதாக பிரேமலதா விஜயகாந்த் நேற்று அறிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி இதில் போட்டியிடுகிறது. அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி யிடுவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார் என்று தெரிவித்தார்.
தமாகா தேர்தல் குழு அமைப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் த.மா.கா, அ.இ.அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது. இதையொட்டி 16 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
கால்வாயில் பலியான சிறுவன்; ஊராட்சி செயலர் நீக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாதாளச் சாக்கடையில் விழுந்து சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் இடைக்காலமாக பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் பிரதீஷ் நேற்று முன்தினம் பாதாளச் சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில் சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் சாஸ்திரம்பாக்கம் ஊராட்சிச் செயலாளர், டேங்க் ஆபரேட்டர் ஆகியோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

