மதுரை: 'திராவிட மாடல்' வார்த்தைகளில் உள்ள 'மாடல்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் வார்த்தை என்னவென்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளில் தமிழில் பெயர் இடம்பெறுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'திராவிட மாடல்' என்ற சொல்லாடலை தமிழக அரசு அதிகம் பயன்படுத்துவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த முக்கியமான சொல்லாடலை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முற்றிலும் தமிழில் பயன்படுத்தலாமே என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசாணைப்படி மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஆங்கிலம், தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.
ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப் பலகைகள் வைத்திருக்கும் நிறுவனங்கள்மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைப் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக நீதிபதிகள், "தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். குறிப்பாக, சட்டக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்களைத் தமிழில் வழங்கவேண்டும். வழக்குத் தொடர்பாக குறிப்பு எடுக்கப் பயன்படும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வரவேண்டும்" என்று கருத்து தெரிவித்தனர்.

