அண்மைய காலமாக தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையில் பனிப்போர் நிலவினாலும் நாட்டின் 74வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது இருவரும் இன்முகத்துடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தனர்.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இந்தியாவின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் சென்னை கடற்கரைச் சாலையில் காந்தி சிலை அருகே மாநில ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றும் விழா நடைபெற்றது. வீரச்செயல் புரிந்தோருக்கு குடியரசு தினப் பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.
பின்னர், பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பும் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவற்றைத் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
விழாவிற்கு முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் ரவி விழாவிற்கு வருகை புரிந்தார்.
திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத நிலையில் நேற்று ஆளு நரை இன்முகத்துடன் பூங்கொத்து தந்து வரவேற்று உபசரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இருவரும் ஏறக்குறைய ஒரு மணி நேரம் அருகருகே அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டனர்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்துக்குப் பிறகு 15 நாள்கள் கழித்து முதல்வரும் ஆளுநரும் நேற்று மீண்டும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.
ஆளுநர் தமது மனைவி லட்சுமி ரவியுடன் வந்திருந்தார். முதல்வர் ஸ்டாலினும் தமது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.
நிகழ்ச்சியில் இறுதியாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. இதில் முதலில் வந்த 'தமிழ்நாடு வாழ்க' என்ற வாசகத்துடன்கூடிய அலங்கார ஊர்தி பலரின் கவனத்தை ஈர்த்தது.
இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் நிறைவடைந்தது. பின்னர் விழா மேடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஆளுநரை முதல்வர் இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தார்.
நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாததைச் சுட்டிக்காட்டி இதற்கு முன்னர் ஆளுநர் நடத்திய பொங்கல் விழா தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் நேற்று முன்தினம் முதல்வரைத் தொலைபேசி மூலம் தேநீர் விருந்துக்கு வருமாறு கேட்டுக்கொண்டதாகவும் முதல்வர் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்பட்டது. முதல்வருடன் அமைச்சர் துரைமுருகனும் இதில் கலந்துகொண்டார்.

