மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வெளிநாட்டுச் சிற்பக் கலைஞர்கள் சிற்பம் செதுக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுவீடனில் இருந்து சுற்றுலா வந்த இவர்கள், பல்லவ மன்னர்களின் காலத்தில் உருவான கற்சிற்பங்களைக் கண்டு வியந்தனர். எனவே இங்கு தங்கி பயிற்சிபெற முடிவு எடுத்தனர்.
சுவீடனைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் ஸ்டெஃபனோவிற்கு வயது 80. இவர் ஐரோப்பிய நாடுகளின் சிற்பக்கலைஞர்கள் கூட்டமைப்புக்குத் தலைமைப் பொறுப்பெற்றுள்ளார்.
இவருடைய தலைமையில் இத்தாலி, ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், நார்வே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் 10 பேர் இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ளனர். நாட்டின் மாநிலங்களுக்குச் சென்ற இக்குழுவினர், மாமல்லபுரம் வந்தபோது அங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம் போன்ற பல்லவ மன்னர்கள் காலத்திய சிற்பங்களைப் பார்த்து வியந்தனர். பல்லவர் பாணி சிற்பங்களை வடிக்கக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், மாமல்லபுரத்தில் உள்ள அரசு சிற்பக் கலைக்கல்லூரியின் கற்சிற்பப் பிரிவில் பணிபுரிந்த முன்னாள் பேராசிரியரும் புகழ்பெற்ற சிற்பியுமான பாஸ்கரனை அணுகினர்.
அவரும் முதற்கட்டமாக, தனது சிற்பக்கலைக்கூடத்தில் கருங்கல், பச்சைக்கல், கிரானைட் கற்களில் சிற்பம் செதுக்கும் பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கினார்.
இந்தப் பயிற்சி மூன்று மாத காலம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் செ.ரா. காந்தி கலந்துகொண்டு வெளிநாட்டுக் கலைஞர்களுக்கு தமிழ்க் கலாசாரப்படி சால்வை அணிவித்துச் சிறப்பித்தார்.

