கரூர்: டாஸ்மாக் மதுக்கடை வசூல் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டி ஊழியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.
கரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
சான்றிதழ் பெற்றவர்களில் டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் ஒருவரும் விற்பனையாளர் மூவரும் அடங்குவர். டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் பணியைச் சிறப்பாக மேற்கொண்டதற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், இவ்வாறு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

