சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, மூன்று நாள்களுக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இயலாது என்றும் ெதரிவித்துள்ளது.
எனவே, பழனிசாமியின் இடையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அதிரடி பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்கிறது. இதனால், ஒற்றைத் தலைமையாகச் செயல்பட்டு வரும் பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு பன்னீர்செல்வமும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தன் மனுவில், அதிமுக பிரதிநிதி என்ற முறையில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய பழனிசாமிக்கு உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு விண்ணப்பித்தால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனவும் உத்தரவிட்டிருந்த நிலையில், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

