கடலூர்: மனைவியைத் தண்டிக்க நினைத்து ஆடவர் ஒருவர் பெட்ரோலை ஊற்றியதில் அவர் உட்பட ஐந்து பேர் தீயில் கருகி மாண்டனர்.
கடலூரில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்தது. சற்குரு, 26, எனப்படும் அந்த ஆடவர் தேனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர். சிதம்பரத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, 24, என்பவரை அவர் காதலித்து மணந்துகொண்டார். அவர்களுக்கு லக்சன் என்ற பெயரில் கைக்குழந்தை இருந்தது.
கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொழில்நுட்பராகப் பணியாற்றிய சற்குரு, அண்மையில் வேலையின்றி இருந்தார்.
இந்நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தம்பதிக்குள் மோதல் ஏற்பட்டு, தனலட்சுமி தனியாக வசித்துள்ளார்.
இதனால், சற்குரு அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
விவாகரத்து வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நேற்று முன்
தினம் விசாரணைக்கு வந்தபோது தனலெட்சுமி விவாகரத்துக்கு சம்மதிக்காமல் குழந்தையுடனும் தமது தாய் செல்வியுடனும் அக்கா தமிழரசியின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
பின்தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற சற்குரு, தனலெட்சுமி
யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வெளியில் இருந்த தமது மோட்டார் சைக்கிளிலிருந்து பெட்ரோலை எடுத்து வந்த சற்குரு, வீட்டின் கதவைச் சாத்தி உட்புறம் தாழ்ப்பாள் போட்டார்.
குழந்தைகள் உட்பட அங்கிருந்த அத்தனை பேர் மீதும் சற்குரு பெட்ரோலை ஊற்றியதாகவும் எரிந்துகொண்டிருந்த தீப்பொறி பறந்து மின்னல் வேகத்தில் அத்தனை பேர் மீதும் பட்டதாகவும் கூறப்பட்டது.
சிறிது நேரத்தில் வீட்டுக்குள் இருந்து பலர் அலறும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்ததில் தனலட்சுமி, சற்குரு, இவர்களது 9 மாதக் குழந்தை லக்சன், தமிழரசி, 27, தமிழரசியின் 4 மாதக் குழந்தை பி.ஹாசினி, தாயார் செல்வி, 50, ஆகிய 6 பேர் மீதும் தீப்பற்றியது. தமிழரசியும் கைக்குழந்தைகளான ஹாசினி, லக்சனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் சிப்காட் தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்து, உயிருக்குப் போராடிய செல்வி, சற்குரு, தனலட்சுமி ஆகியோரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குரு உயிரிழந்தார். அவரது மனைவி தனலெட்சுமி நேற்றுக் காலை சிகிச்சை பலனின்றி மாண்டார். 90 விழுக்காடு தீக்காயம் அடைந்த செல்வி, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்தக் குடும்பத்தில் இவர் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், நேற்று மாலை வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இந்த சோகச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

