சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (படம்) கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்
சோலையில் படுகொலை செய்யப் பட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்கமுடியாமல் விசாரணை நீள்கிறது.
இந்த நிலையில், விசாரணையில் இருந்த 13 பேரில் ஒருவர் மட்டும் சம்மதிக்காததால் இதர 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர் மோசஸ் தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கேள்விகள் கேட்கும்போது அவர்களின் பதிலில் உண்மை உள்ளதா என்பதை அவர்களின் இருதயத் துடிப்பு மற்றும் மூளையின் செயல்பாடுகளின் அளவீடுகளை வைத்து கணக்கிடப்படும். அந்த சோதனையின் முடிவு தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையில் திலீப் என்பவர் தவிர மற்ற 11 பேரும் பொய் கூறியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இதயத் துடிப்பும் மூளையின் செயல்பாடும் மாறுபட்டதால் உண்மையை 11 பேர் மறைக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணைக்கு சிறப்புப் புலனாய்வுக்குழு தயாராகி வருகிறது.

