சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், அந்தந்த கட்சியினரும் வீடுவீடாகச் சென்று அனல் பறக்கும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதனால், முக்கிய கட்சிப் பிரமுகர்கள் பலரும் இப்பகுதியில் முற்றுகையிடத் தொடங்கி உள்ளதால், ஈரோடு தொகுதி முழுவதும் விழாக்கோலத்துடன் காட்சியளிக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டி யிடுகின்றனர்.
இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 180 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கூறுவது போல் திமுக அரசு மீது மக்கள் எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை என்று ஈரோடு பிரசாரத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் பொதுமக்களுக்கு புரோட்டா சுட்டுக்கொடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படி அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேட்டுக்கொண்டார்.
மற்றொரு அமைச்சரான தங்கம் தென்னரசு இருசக்கர வாகனத்தில் தொண்டர்களுடன் சென்று வாக்குச் சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் தென்ன ரசுக்கு ஆதரவு திரட்ட பாஜக களத்தில் இறங்கி உள்ள சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேநீர் கடையில் தேநீர் போட்டுக் கொடுத்து தென்னரசுக்கு வாக்குச் சேகரித்தார். அத்துடன் சலவைக் கடையில் துணிகளை இஸ்திரி செய்துகொடுத்தும் வாக்குச் சேகரித்தார்.
"இதெல்லாம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெறும் வரைதான். அதன்பின்னர் இவர்களில் யாரையும் பார்க்கமுடியாது," என்று அங்குள்ள மக்கள் வருத்தத்துடன் கூறினர்.
மணல்மேடு பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.வி.ராமலிங்கம் ஆகியோரு டன் வீடுவீடாகச் சென்று தென்னரசு இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.
"பண பலம், அதிகார பலத்தின் மூலம் திமுக வெற்றிபெறத் துடிக்கிறது. பணம், பிரியாணியைக் கொடுத்து அதிமுக கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் தடுக்கிறது," என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

