புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காத மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இதுதொடர்பாக மக்களவை யில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த விஷயத்தை அரசியல் ஆக்குவதாகவும் தவறான தகவல்களைக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
"இப்போது மதுரை எய்ம்ஸில் மருத்துவப் படிப்பு தொடங்கி விட்டது. எதற்காக உங்கள் மாநில மக்களுக்குத் தவறான தகவல்களைச் சொல்கிறீர்கள். மதுரையில் எய்ம்ஸ் இயக்குநர் இருக்கிறார். அங்கு பாடங்கள் நடத்தப்படுகின்றன," என்றார்.
இதையடுத்து, பேசிய பேர வைத் தலைவர் ஓம் பிர்லா, மன்சுக் கூறிய தகவல்கள் சரியா? இல்லையா? என்பதை ஆராய்வதாக உறுதியளித்தார்.