திருச்சி: வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்துவது அண்மையில் அதிகரித்துள்ளது.
இதனால் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரில்இருந்து 'ஸ்கூட்' விமானம் சனிக்கிழமை இரவு திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த 41 வயது நபரின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்த தால் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவர் கொண்டு வந்த பொருள்களை சல்லடை போட்டு நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
இதில் மின்னணு சாதனங்களில் அவர் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளிக் கிழமை துபாயில் இருந்து 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் திருச்சி வந்தது.
இந்த விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த 43 வயது நபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர், உடமைகளில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இரு பயணிகளிடம் இருந்து மொத்தம் 1,516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 86 லட்சம் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

