கோவை: கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் கோகுல் என்ற வாலிபர் கொல்லப்பட்ட வழக்குத் தொடர்பில் இருவரை காவலர்கள் சுட்டுப் பிடித்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தை தந்தது, கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் மேலும் மூவர் கைதானதை அடுத்து, இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் நேரடித் தொடர்புடைய ஏழு பேரை ஏற்கெனவே கைது செய்திருந்த காவலர்கள், அவர்களை அழைத்து வந்தபோது மேட்டுப்பாளையம் அருகே இருவர் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் தப்பி ஓடும்போது காவலர்கள் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.
கோவையில் உள்ள லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல், 22, ரவுடி. இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்துவந்த நிலையில், கோகுல் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் கோவை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து ஒரு கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் திடீரென கோகுலைச் சுற்றி வளைத்து கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். தடுக்க முயன்ற மனோஜும் தாக்கப்பட்டார். கொலைகாரர்களைப் பிடிக்க எட்டு தனிப்படை காவலர்கள் களமிறங்கினர்.

