கோவை: இரண்டு ரவுடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் இன்ஸ்டகிராம் தளம் மூலம் தொடர்ந்து மோதி வந்ததை கோவை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அக்கும்பல்களின் சமூக ஊடகப் பதிவுகளைக் கண்டு காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாவட்டம், கண்ணப்ப நகர் பகுதியில் இரண்டு ரவுடிக் கும்பல்கள் இயங்கி வருகின்றன. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக்கொள்வதும் அதில் பலர் படுகாயமடைவதும் வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராம் என்பவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக கோகுல் உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகினர்.
இந்நிலையில் ஸ்ரீராம் கொலைக்குப் பழிதீர்க்கும் விதமாக கடந்த 13ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கோகுலை படுகொலை செய்தது எதிர்த்தரப்பு.
இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட தீவிர விசாரணையின் போதுதான் இரண்டு ரவுடிக் கும்பல்கள் இன்ஸ்டகிராமில் மோதிக்கொண்டது தெரியவந்தது.
இரு கும்பல்களுக்கும் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொளிப் பதிவுகள் சமூக ஊடகத் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்தக் காணொளிகளில் இரு கும்பலைச் சேர்ந்தவர்களும் பட்டாக்கத்தி, அரிவாள், துப்பாக்கி ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி அளிக்கின்றனர்.
இரு தரப்பினரும் ஒருவருக்குப் போட்டியாக மற்றொருவர் என காணொளிகளை வெளியிட்டு வந்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள காவல்துறை, சமூக ஊடகங்களில் பல்வேறு பெயர்களில் இயங்கி வரும் இவ்விரு கும்பல்களின் கணக்குகளை முடக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே இவ்விரு கும்பல்களில் ஒன்றை தலைமறைவாக இருந்தபடி வழிநடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கும் வலைவீசப்பட்டுள்ளது.

