'கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாக உள்ளது'
புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 'நீட்' தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அத்தேர்வை ரத்து செய்ய அல்லது தமிழகத்துக்கு அத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரும் தீர்மானம் ஒன்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதா நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து இந்த மசோதாவை தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக நீட் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் கேட்டபோது, அதை அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்தது.
இதற்கிடையே, நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதற்கு சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி தமிழக அரசு பதில் அளித்தது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகியுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இது தொடர்பான மத்திய அரசின் செயல்பாடு கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு மாநில அரசைக் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரியுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெறும்போது மத்திய அரசு தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் எனத் தெரிகிறது.

