திண்டுக்கல்: பாலியல் தொல்லை வழக்கில் நான்கு நாள்களுக்குள் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியுள்ளது கொடைக்கானல் நீதிமன்றம். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர் அப்பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.
கடந்த 4ஆம் தேதியன்று கொடைக்கானல் சென்றுவிட்டு அவர் காரில் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மன்னவனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா (22 வயது), பூண்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (26 வயது) ஆகிய இருவரும் அவரது காரை வழியில் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
செல்லும் வழியில் தங்களை இறக்கிவிடுமாறு இருவரும் கேட்டதால் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார் அந்த இளம்பெண்.
எனினும், காரில் ஏறிக்கொண்ட இரு ஆடவர்களும் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, ஜீவாவையும் பாலமுருகனையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டது.
பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை அடுத்து வழக்குப்பதிவானது.
பின்னர் கடந்த 10ஆம் தேதி கொடைக்கானல் இரண்டாவது நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இருவரும் குற்றம் புரிந்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கே.கார்த்திக் தெரிவித்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் நான்கே நாள்களில் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

