சென்னை: திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கைதான கொள்ளையர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட முகமது ஆரீஃப்பும் அவனது கூட்டாளியும் அண்மையில் கைதாகினர்.
அப்போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.70 லட்சம் என்னவானது என்பது தெரியவில்லை.
கொள்ளையடித்த ரூ.73 லட்சத்தை ஒரு லாரியில் வைத்து முகமது ஆரீஃப்பும் அவனது கூட்டாளிகளும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்போது அந்தப் பணம் குறித்து கொள்ளையர்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
கைதான இரு கொள்ளையர்களையும் மார்ச் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கொள்ளை நடந்த ஆறு நாள்களில் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த தமிழக காவல்துறையின் தனிப்படைக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
மேலும், காவல்துறை சார்பில் தனிப்படையினருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

