வாகனமோட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவரின் அசையும் சொத்துகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மூலம்் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மது விற்பனையைப் போன்றே, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படக்கூடிய விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்படுகிறது. ஆனால் பலர் அபராதம் செலுத்துவதில்லை. போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதத் தொகைகளை வசூலிப்பதற்கென்றே சிறப்பு முகாம்கள் நடத்தப்்பட வேண்டிஉள்ளது.
இதையடுத்தே அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமல்படுத்தப் போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது. இனி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அபராதம் செலுத்தாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் வாகனங்களோ அல்லது அசையும் சொத்துக்களோ நீதிமன்றங்கள் வாயிலாக பறிமுதல் செய்யப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகளை விற்போரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
சில வழக்குகளில் கஞ்சா வியாபாரிகளின் அசையா சொத்துகளும்கூட பறிமுதல் செய்யப்படுகின்றன. தற்போது அதுபோன்ற கடும் நடவடிக்கைகளுக்கு மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரும் ஆட்பட உள்ளனர். காவல்துறையின் இந்த அறிவிப்பை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

