விழுப்புரம்: வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்குத் தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று முன்தினம் மனு அளித்துள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள நெடி மோழியனூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகனான பத்து வயது ராகுலுக்கு விநோதமான பிரச்சினை உள்ளது.
சிறுவனின் உடலில் அவ்வப்போது திடீரென தீப்பற்றிக்கொள்ளும். இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த 2013ஆம் ஆண்டு மகன் ராகுலைப் பெற்றெடுத்ததாகவும் பிறந்து ஒன்பது நாள்களிலேயே ராகுலின் உடல் தானாகத் தீப்பிடித்து எரிந்தது தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் உதவியோடு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு தீப்பிடித்து எரிவது குறைந்துள்ளதாக ராஜேஸ்வரி கூறினார்.
"எனக்கும் எனது குழந்தைக்கும் உதவித்தொகை, தொகுப்பு வீடு, எனது கணவர் பிழைப்பு நடத்த வாகனக் கடன், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதாக அரசு முன்பு தெரிவித்தது. ஆனால் உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை.
"தற்போது எனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறேன். ராகுல் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு தீக்காயம் ஏற்பட்ட தலை, வயிற்றுப் பகுதியில் பெரிய தழும்புகள் உள்ளன," என்று ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறுவன் ராகுலுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்றும் அரசு உதவி கிடைத்தால் ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறுவன் ராகுலுக்கு உள்ள வினோதப் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான மருத்துவத் தீர்வு கிடைக்கவில்லை என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

