சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்வதாகவும் இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், ஏற்கெனவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, இடைத்தேர்தல் தொடர்பான மற்றொரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் ஐம்பதாயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்துள்ள உறுதிமொழியை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டு, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் நேற்று ஈரோட்டில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

