சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தின் மூலம் தேசிய அளவிலான புதிய அரசியல் கூட்டணிக்கு திமுக தலைமை அச்சாரம் போட இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய அளவிலான அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தமது 70வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது திமுகவினருக்கு மட்டுமல்லாமல், தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டாட்டமாக அமையும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநிலத் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக புதிய எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தனித்தனியே மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அத்தகைய முயற்சியைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குறிப்பிட்ட மூன்று தலைவர்களுக்கும் இன்னும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மூன்று தலைவர்களுமே எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைமையேற்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதனால் ஒருவரது முயற்சிக்கு மற்றொருவர் உதவிகரமாக இல்லை. இந்நிலையில், மூன்று தலைவர்களுமே காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமைவதை விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதை திமுக தலைமை விரும்புவதாகவும் அதற்கேற்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் அரங்கில் காய்களை நகர்த்தி வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

