சென்னை: அழகு நிலையம் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்ததை சென்னை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து அழகு நிலையத்தில் இருந்த இளையர் ஒருவர் கைதானார். ஐந்து இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அழகு நிலையங்கள், உடம்புபிடி நிலையங்கள் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதை காவல்துறை அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில், சட்டத்துக்குப் புறம்பாக பாலியல் சேவை அளிக்கப்படுவது குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இணையம் வழி பணம் செலுத்திவிட்டு, அந்த சொகுசு விடுதிக்கு வருபவர்்கள், பின்னர் அங்குள்ள அழகு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் அங்குள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் இணையம் வழி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள கும்பலை உரிய ஆதாரங்களுடன் பிடிக்க காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, காவல் ஆய்வாளர் பிரபு என்பவர் முதலில் மாறுவேடத்தில் அந்த சொகுசு விடுதிக்குச் சென்றார். அங்கிருந்த இளையர், முன்பதிவு செய்ததற்கான பதிவு எண்களை கேட்க, அவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது. அந்த ஆடவர் கைதானார்.
அதன் பின்னர் அழகு நிலையத்துக்குள் புகுந்த காவல்துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டபோது, மணிப்பூர், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த இரு பெண்களும் சென்னையைச் சேர்ந்த மூன்று பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஐந்து பெண்களும் மீட்கப்பட்டனர்.
சென்னையில் அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளின் கீழ் பாலியல் தொழில் நடைபெறுவதாகக் காவல்துறைக்குப் புகார்கள் வருவதாகவும் அவற்றின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலை நடத்தி வந்த கும்பலுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
கைதான இளையர் தவிர மேலும் பலருக்கு இதில் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
இணையம்வழி பணம் செலுத்தினால் சென்னை ஆடம்பர விடுதியில் உல்லாசம்

