தஞ்சை: தமிழ் மொழி மேன்மேலும் சிறக்க வேண்டும், உலகெங்கும் பரவ வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஜப்பான் குடிமக்கள் தமிழகத்தில் நடத்திய யாகம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று முன்தினம் தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் இந்த சிறப்பு யாகம் நடந்தேறியது. இதில் ஜப்பானைச் சேர்ந்த இருபது பேர் பங்கேற்றனர். அவர்களில் எட்டு பேர் பெண்களாவர்.
தகாஈஹி எனப்படும் பாலகும்பமுனி என்பவர் இக்குழுவை தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் குரு தலம் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பான் குழுவினரின் ஏற்பாடு, பங்கேற்புடன் இங்கு ருத்ர யாகம் நடைபெற்றுள்ளது.
யாகத்துக்குப் பின்னர் சிறப்புப் பூசை, அபிஷேகம், அர்ச்சனை ஆகியவையும் நடைபெற்றதாக ஜப்பான் குழுவினருடன் வந்துள்ள சுப்பிரமணியன் கூறினார்.
இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒட்டஹோமா பல்கலைக்கழகம், ஆசியான் நூலகத்தில் தமிழ் மொழி கற்றுத் தரும் சுப்பிரமணியன் தமிழ் மொழியைக் கற்பதிலும் தமிழ் பண்பாடு, கலாசாரத்தை பின்பற்றுவதிலும் ஜப்பானியர் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடுகிறார்.
"ஜப்பானியர் மத்தியில் இப்போது ஆன்மிகத் தேடலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், முக்கியமான சிவாலயங்களில் வழிபடுவதுடன், சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர்.
"தமிழ் மொழியின் வளர்ச்சி, உலக அமைதி ஆகியவற்றை முன்வைத்து அண்மைய யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

