சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி 'குரல் அறிவிப்புகள்' இருக்கா மாட்டா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாற்றாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளிலும் மின்னிலக்க அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே இத்தகைய முயற்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் முதன் முதலாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாள்தோறும் 5.3 லட்சம் பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ரயில் புறப்பாடு, வருகை குறித்து முன்பு குரல் வழி அறிவிப்புகள் இருந்தன. 200 விரைவு ரயில்களுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருக்கும். தற்போது ரயில் நிலையத்தின் நுழைவாயில்கள் தொடங்கி பல்வேறு இடங்களில் மின்னிலக்க அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன.
மேலும், பார்வையற்றவர்கள் வசதிக்காக முக்கிய நுழைவாயிலில் 'பிரெய்லி' முறையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டும் வரைபடங்கள் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் ரயில் நிலைய கண்ணோட்டத்தை வழங்கும் சைகை மொழி வீடியோவைப் பார்ப்பதற்கான 'க்யூ.ஆர். கோட்' பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

