சென்னை: தமிழக பாஜகவினர் சமூக பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதாக தொல்.திருமாவளவன் சாடி உள்ளார்.
தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் இது தொடர்பாக அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வெளியிலும் பொது மேடைகளிலும் பாஜகவினர் பேசுவது வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பாஜவினர் சமூக வலைத்தளங்களிலும் வன்முறையைத் தூண்டும் கருத்துப்களை பதிவிட்டு வருவதாக அவர் சாடினார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை குறித்த சிலதகவல்களை டிஜிபியிடம் பகிர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
"ஒரு ராணுவ பணியாளர், ராணுவத்தில் வேலை செய்யக் கூடியவர், 'குண்டு வீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம்' என்றெல்லாம் பேசும் அளவுக்கு தமிழக பாஜக தலைவர் வெளிப்படையாகவே ஊக்கப்படுத்துகிறார். இது சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும் என்கிற சதித்திட்டம் என்று தெரிய வருகிறது. திமுக அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதில் பாஜக குறிவைத்து வேலை செய்கிறது," என்றார் திருமாவளவன்.
வட மாநிலங்களில் வெறுப்பு பேச்சு, பரப்புரைகள் மூலம் பாஜக வன்முறைகளைத் தூண்டி ஆதாயம் தேடி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், அதே உத்தி களைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த பாஜகவினர் திட்டமிடுவதாகக் கூறினார். பாஜகவினரின் இத்தகைய சதி முயற்சியைச் சுட்டிக்காட்டி அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைவரிடம் வலியுறுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

