ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சங்கலிப் பறிப்பில் ஈடுபட்ட இளம் பெண்ணை கோவை காவல்துறை கைது செய்தது.
விசாரணையின்போது பொது மக்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளைப் பறிப்பதையே குடும்பத் தொழிலாகச் செய்து வருவதாக கைதான 32 வயதுப் பெண் சத்யா தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர் தனது மனைவி, குடும்பத்தாருடன் கோவில் திருவிழா, தேரோட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்றுவிடுவார். பக்தர்கள் போன்ற தோற்றத்தில் வலம்வந்து, பொதுமக்கள் அணிந்துள்ள நகைகளைப் பறிப்பதுதான் அவரது குடும்பத்தாரின் வழக்கம்.
இந்தச் சங்கிலிப் பறிப்பு கும்பலில் அவரது உறவுப் பெண்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர். அண்மையில் இக்கும்பல் கோவைக்கு வந்து கைவரிசை காட்டத் தொடங்கியது. பேருந்தில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்டார் சத்யா. அவருடன் பேருந்தில் உடனிருந்தபோதும், சத்யா பிடிபட்டதும் சத்தமின்றி நழுவிவிட்டார் வடிவேலு.
இவரது குடும்பம் ஏராளமான சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களை நிகழ்த்தி, அதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் சேர்த்துள்ளனர். அதை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக சத்யா வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது கணவருக்கும் உறவுப் பெண்களுக்கும் காவல்துறை வலைவீசியுள்ளது.

