மதுரை: இனி கோவில்களில் வளர்க்கப்படுவதற்கு என யானைகள் வாங்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தபோது, யானைகள் மீதான தாக்குதலைத் தடுக்கும் நடவடிக்கையாக உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.
கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம் என்று குறிப்பிட்டுள்ள அவர், பல கோவில்களில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் யானைகள் வைக்கப்பட்டு உள்ளதாக கவலை தெரிவித்தார்.
“பல யானைகள் 24 மணி நேரமும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. மதுபோதையில் உள்ள பாகன்களால் யானைகள் துன்புறுத்தப்படுகின்றன.
“சித்திரவதை தாங்க முடியாமல், யானைகள் சில நேரங்களில் கோபமடைந்து வன்முறையில் ஈடுபடுகின்றன. எனவே அனைத்துக் கோவில்கள், தனியார் யானைகளை தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் ஆய்வு செய்யவேண்டும்,” என நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.