திருச்சி: தமிழக அரசுப் பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் க்ளாஸ்) என்ற புதிய முயற்சி செயல்படுத் தப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள ஏழு பள்ளிகளில், 28 வகுப்பறைகள் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்காக ஒவ்வொரு வகுப்பறைக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.56 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்பறைகளில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள திரைப்பலகை மூலம் (மின்னிலக்கப் பலகை) கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இதனால் கற்றல் திறன் மேம்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்கிடையே, தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்குவதை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
அசத்தும் பெரம்பலூர் பள்ளி
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளி ஒன்று, தனியார் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில் செயல்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பள்ளியில் தற்போது 458 மாணவர்கள் படித்து வருகின்றனர். 12 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் சுத்தமான குடிநீர், சுகாதாரமான சத்துணவு, வகுப்பறைகளில் மின்விசிறி, வகுப்பறைகள் முழுவதும் அழகிய கல்வி சார்ந்த வண்ண ஓவியங்கள், அறிவுத்திறன் வகுப்புகள் ஆகியவை உள்ளன என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகா வகுப்புகள், ஆங்கில மொழித்திறன் பயிற்சி, கணிதப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி ஆகியவற்றுடன் நாள்தோறும் பல்வேறு விதமான தேர்வுகளும் நடத்தப்படுவதால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதாகப் பெற்றோர் கூறுகின்றனர். இத்தகைய செயல்பாடுகள் காரணமாக அப்பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்புகளை நடத்துவதற்கு கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

