சென்னை: மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவம், பன்மைத்துவம் போன்றவற்றைத் தகர்க்கும் முயற்சியில், ஆட்சியில் இருப்பவர்களே ஈடுபடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அரசமைப்புச் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் தேசிய கல்விக் கொள்கையானது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று தெரிவித்துள்ள அவர், இத்தகைய அரசியல் போக்கில் இருந்து விடுபட்டு, ஜனநாயக இந்தியாவைக் கட்டமைக்கும் போராளிகள் என்ற உணர்வோடு சட்டம் பயில வேண்டும்,” என்றார் திருமாவளவன்.
சென்னையில் நேற்று முன்தினம் ‘அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு பேராபத்து’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றுக்கு உரிய வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இக்கூறுகளை சிறிதளவும் மாற்றாத வகையில் சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.