சிவகங்கை: கீழடி அகழ் வைப்பகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழினத்தின் தொன்மையை விவரிக்கும் சான்றுகளாக கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின்போது ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் 12,000 பொருள்கள் அகழ் வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் தேதி முதல் அகழ் வைப்பகத்தைப் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து ஏராளமானோர் அகழ் வைப்பகத்திற்கு வருகை தருகின்றனர். இவர்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
"இதனால் கீழடி கிராமம் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட தொல் பொருள்களை நாள்தோறும் காலை 9 முதல் மாலை 7 மணி வரை அனைவரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
"சனி, ஞாயிறுகளில் சுமார் மூவாயிரம் பேர் வருகின்றனர். தற்போது அனுமதி இலவசம். விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம்," என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

