சென்னை: பல்வேறு தரப்பினரும் புகார்களை அடுக்கியதை அடுத்து, தமிழகத்தில் கோவில் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி ஆட்டத்திற்குத் தடை விதித்துள்ளது அரசு. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும்போது குறவன், குறத்தி நடனம் இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.
எனினும், அண்மைக்காலமாக குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் சில தரப்பினர் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்வதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன.
கவர்ச்சியான உடையணிந்து, ஆபாச நடன அசைவுகளுடன் அத்தகைய நடனங்கள் அரங்கேறின. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததால் பல கோவில்களில் குறவன், குறத்தி நடனம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆபாசமாக இருப்பதாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளதாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

