சென்னை: தனது செங்கல் சூளையில் பணியாற்றி வரும் வடமாநில இளம் பெண்ணுக்கு தனது செலவில் வளைகாப்பு விழா நடத்தியுள்ளார் அச்சூளையின் உரிமையாளர் பாலமுருகன்.
கறி விருந்து, ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வின் முடிவில் அவருக்கு தொழிலாளர்கள் நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தனர்.
தென்காசி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் நூற்றுக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடையம் அருகே வடக்கு மடத்தூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவரது செங்கல் சூளையில் கோல்கத்தாவைச் சேர்ந்த ஏழு குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர்.
இவர்களில் பொறி, தோனியம்மாள் ஆகிய இருவரும் காதலித்து மணம் புரிந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது தோனியம்மாள் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தனது மனைவிக்கு வளைகாப்பு விழா நடத்த வேண்டும் என்பது கணவர் பொறியின் விருப்பமாக இருந்தது. எனினும், சொந்த ஊர் சென்று திரும்ப நிறைய செலவாகும் என்பதால் யோசித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் வெளியாகும் நிலையில் சொந்த ஊர் சென்றால் அந்த வதந்தியை நம்பியது போல் ஆகிவிடும் என்ற தயக்கமும் இருந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த சூளை உரிமையாளர் பாலமுருகன் தோனியம்மாளுக்கு தனது செலவில் வளைகாப்பு விழாவை நடத்துவது என முடிவு செய்தார்.
தென்காசியில் உள்ள பொறி, தோனியம்மாள் ஆகியோரின் உறவினர்களை மட்டும் அழைக்கலாம் என்று அவர் தெரிவித்த யோசனையை பொறியும் ஏற்றுக் கொண்டார்.
இரு தினங்களுக்கு முன் தோனியம்மாளின் வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கறி விருந்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அவரது உறவினர்கள் பலர் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

