'இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும்'
சென்னை: தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் முயற்சி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
"தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தொழில்நுட்ப வளர்ச்சியால் கல்வி அறிவு விரல் நுனியில் வந்துவிட்டது. கையடக்க தொலைபேசியில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் அதிகளவில் வளர காரணம் திமுக அரசுதான் என்றும் அத்துறையில் தமிழகம் முதல் இடத்தைப் பிடிக்க நடப்பு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
"இன்றைய காலகட்டத்தில் தரவுகள்தான் முக்கிய எரிபொருள். ஆனால், வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுக்க சில அரசியல் சக்திகள் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
"இளைய தலைமுறை தகவல் தொழில்நுட்பத்தை தங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
"இணையச் சூதாட்டம் மனித உயிர்களைப் பலிவாங்குகிறது. எனவே இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்," என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

