பிரதமர் மோடி திறக்கிறார்; பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
சென்னை: சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து ரூ.2,400 கோடி திட்ட மதிப்பில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் உருவாகிவிட்டது.
இதனை இம்மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் திறந்து வைக்கவிருக்கிறார்.
ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சென்னை விமான நிலையத்தில், கூடுதலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கவிருக்கிறது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ளது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு 3.5 கோடியாக (35 மில்லியன்) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய முனையத்தில், கீழ் தளத்தில் பயணியர் உடைமைகள் கையாளப்படவுள்ளன.
தரைத் தளத்தில் அனைத்துலகப் பயணிகள் வருகை பகுதியாக பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் கையாளப்படும்.
இரண்டாவது தளத்தில், பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதர தளங்களில் விமான நிறுவன அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன.
மொத்தம் ஐந்து தளங்களுடன் இந்தப் புதிய முனையம் உருவாகி வருகிறது.
புதிய விமான முனையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு, கருவிகள், உபகரணங்களின் சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் புதிய முனையத்தை, ஒட்டு மொத்தமாக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம், 27 ஆம் தேதி திங்கள் கிழமை சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் முறைப்படி தொடங்கி வைக் கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்று, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு ஹெலிகாப்டரில் மதுரை வந்து, மதுரையில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார்.
இந்தப் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் சென்னை வருகை பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.