சென்னை: பிளஸ்-2 தேர்வில் 50,000 மாணவர்கள் தமிழ்ப் பாடத் தேர்வு எழுதாதது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 4 விழுக்காடு மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருப்பது வழக்கம். இந்த நிலையில் சென்ற திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ்-2 தமிழ்த் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்பது பெரும் அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.
பள்ளிப் படிப்பின் இறுதி கட்டமான பிளஸ்-2 பொதுத்தேர்வில் தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
கடந்த ஆண்டு 32,000 மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில் இவ்வாண்டு கூடுதலாக 18,000 மாணவர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

