நெல்லை: நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று ஆறாவது நாளாக நீடித்தது. அப்போது மீனவர்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடுதாழை கடற்பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதனால் அப்பாதிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இதை வலியுறுத்தி கடந்த 11ஆம் தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, படகுகள் மீது கறுப்புக்கொடி ஏற்றுவது எனப் பல்வேறு விதமாக மீனவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
ஐந்தாம் நாளன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இதையடுத்து ஆறாம் நாளான நேற்று, மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தூண்டில் வளைவு அமைப்பது, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களுடைய போராட்டம் நீடிக்கும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

