சென்னை: கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. வெப்பத்தின் தீவிரத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஏதுவாக மருத்துவக் கட்டமைப்புகளை தயாா்நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "கோடை வெப்பத்தின் எதிர் விளைவுகளைக் கையாள விரிவான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவற்றை இருப்பில் வைத்திருத்தல் அவசியம்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல, பொதுமக்களும் வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

