22 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியை சுமார் இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றுகிறது. இதனால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றது.
எனினும் மாமல்லபுரம் பேரூராட்சியில் அதிமுகவின் கை ஓங்கியது. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் ஒன்பது இடங்களில் அதிமுக வென்றது.
திமுகவுக்கு நான்கு இடங்களிலும் மதிமுகவுக்கு ஒரே ஒரு இடத்திலும் வெற்றி கிட்டியது. சுயேச்சை ஒருவரும் வென்றார்.
இதையடுத்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகள் அதிமுகவுக்குச் சென்றன.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் திடீரென திமுவுக்கு தாவியுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் அமைச்சர் அன்பரசனிடம் ஆசி பெற்றதாகவும் திமுக உறுப்பினர்களாகச் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், சுயேச்சையாக வென்றவரும் திமுகவுக்கு ஆதரவாக உள்ளார். இதன் மூலம் பேரூராட்சியில் திமுகவின் பலம் 8ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாமல்லபுரம் பேரூராட்சியை திமுக கைப்பற்ற உள்ளது.
இதற்கிடையே அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி பேரூராட்சி நிர்வாகத்தை திமுக கைப்பற்றுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாமல்லபுரம் அதிமுக நிர்வாகிகள், திமுகவின் இத்தகைய மோசமான செயல்பாட்டைக் கண்டித்து அதிமுக போராட்டம் நடத்தும் என்றனர்.
இந்நிலையில், திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே மாமல்லபுரம் மக்களின் நலன் கருதி திமுகவில் இணைந்ததாக அணி மாறிய இரு கவுன்சிலர்களும் கூறியுள்ளனர்.
தங்களுடைய இம்முடிவால் மாமல்லபுரம் பகுதியில் விரைவில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

