சென்னை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.
இந்த அறிவிப்பை ஏழு மாவட்ட மக்களும் வரவேற்றுள்ளனர்.
இதன் மூலம் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள 3,800க்கும் மேற்பட்ட ஊரகக் குடியிருப்புகள் பயனடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிக விரைவில் தொடங்கும் இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அவை பரிசீலனையில் உள்ளதாகவும் சில பணிகளுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டப்பணிகள் அனைத்தும் உரிய விதிகளின்படி விரைவில் தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 980 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1,227.23 கோடி மதிப்பீட்டிலும் மதுரை அலங்காநல்லூர் பகுதியில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,386.66 கோடி மதிப்பிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 667 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,062.20 கோடி மதிப்பீட்டிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதேபோல், ராமநாதபுரம்-திண்டுக்கல் மாவட்டங்களில் ரூ.3,850.76 கோடி மதிப்பிலும் விருதுநகர் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1,286 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1,191.05 கோடி மதிப்பிலும் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டிலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 831 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.525.06 கோடி மதிப்பிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு மேலும் கூறியுள்ளது.
கூட்டுக் குடிநீர் திட்டம் தங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என ஏழு மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மேற்குறிப்பிட்ட ஏழு மாவட்ட மக்கள் நீண்ட நாள்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் மூலம் ஏழு மாவட்டங்களும் பல்வேறு வகையில் பயனடையும் என்றும் அவர்கள் கூறி வந்த நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தைச் சிக்கலின்றிச் செயல்படுத்த உரிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.

