திருவாரூர்: திருவாரூர் அருகே நடந்த தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டில் 25 பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய பாரம்பரிய நெல் மாநாடு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் திருவாரூர் அடுத்த நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மார்ச் 18ஆம் தேதி நடந்தது.
இந்த மாநாட்டில், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, பிரான்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜூலியன் ஜின் மலார்டு ஆடம், பாரம்பரிய நெல் விவசாயி தியாகபாரி முன்னிலை வகித்து பேசினர்.
இதில், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 25 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.