சென்னை: பகுதி நேர வேலை தருவதாகக் கூறி ஏமாற்றும் மோசடிக் கும்பல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல் துறையின் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தி உள்ளது.
பகுதி நேர வேலை இருப்பதாகக் குறிப்பிட்டு இந்தக் கும்பல் அனுப்பும் கைப்பேசி இணைப்பைத் தொட்டால் பெருந்தொகையை இழக்க நேரிடும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
முதற்கட்டமாக இந்தக் கும்பல் இணைய இணைப்பு ஒன்றை கைப்பேசி மூலம் அனுப்பும். அதை தொட்டுத் திறந்தால் காணொளிப்பதிவு ஒன்று தோன்றும். இதையடுத்து, உங்கள் கணக்கில் 300 முதல் 500 ரூபாய் வரவு வைக்கப்படுவதாக தகவல் வந்து சேரும்.
இதனால் உற்சாகம் அடைந்தவர்கள் அந்த கும்பல் கேட்கும் கூடுதல் விவரங்களை அளிக்கும்போது குறிப்பிட்ட ஒரு டெலிகிராம் செயலி குழுவில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
அதன் பின்னர் தாங்கள் அளிக்கும் வேலையைச் செய்து முடித்தால் அதற்குரிய தொகையும் ஊக்கத்தொகையாக 60% அளிக்கப்படும் என்றும் தெரிவிப்பர். இவ்வாறு சிறு முன்தொகை கொடுத்து பணிகளைப் பெற்று, அவற்றைச் செய்து முடிக்கும்போது அவரது கணக்கில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இவ்வாறு ரூ.15,000 வரை பணம் சம்பாதித்தவர்களுக்கு திடீரென பணி ஒன்றை ஒப்படைப்பதாகக் கூறி அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை முன்பணம் செலுத்தச் சொல்வார்கள்.
"இதன் மூலம் பத்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று கணக்கிட்டு பணத்தைச் செலுத்துபவர்கள் ஏமாற நேரிடும்.
"பணம் கிடைக்கவில்லையே என்று அந்தக் கும்பலைத் தொடர்பு கொள்ளும்போது பத்து லட்சம் ரூபாய்க்கு இருபது விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும் என்று கூறுவர்.
"இப்படி ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி தொடர்ந்து பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பர். இவ்வாறு பணிகளை எடுத்துச் செய்து பணம் சம்பாதிக்க விரும்பாதவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பதும் நடக்கிறது.
"இதனால் தங்களது ஒட்டுமொத்த ஓய்வூதியப் பணத்தை இழந்து தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

