சென்னை: எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் இலங்கையின் யாழ்ப்பாணம், காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன் துறையில் இருந்து காரைக்காலுக்கு இயக்கப்படும் பயணிகளுக்கான கப்பலில் முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ள இயலும். ஒவ்வொரு பயணியும் தலா நூறு கிலோ எடையுள்ள பொருள்களைக் கொண்டு செல்லலாம். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.9878 கட்டணம் செலுத்த வேண்டும்.
காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்க ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
அவற்றுள் ஐஎன்டிஎஸ்ஆர்ஐ என்ற நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை இலங்கையின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாக உள்ளது. மேலும், இந்தியாவுக்கு மிக அருகில் நாகை, காரைக்கால் பகுதிக்கு 56 கடல் மைல் (100 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது காங்கேசன்துறை துறைமுகம்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தபோது, இருதரப்பினரும் மாறி மாறி நடத்திய தாக்குதல்களின்போது காங்கேசன்துறை துறைமுகம் பலத்த சேதமடைந்தது. அதன் பின்னர் அத்துறைமுகத்தைச் சீரமைக்க இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியது.

